full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

நடிகர் ஆரி கலந்து கொண்ட ‘தோழமை 108’

நம் நாடு இயற்கைப் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குப் பல நிலைகளில் உதவிகள் புரிய போதிய மனித வளம் இல்லாமல் தவித்துக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில் நம் சமூகத்தைக் காக்க 108 அவசரச் சேவை ஒரு புதிய திட்டத்தை இன்று அடையாறு, பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆரம்பித்துள்ளது. இதன் முதல் முயற்சியாக, அடையாறு, பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ‘நமது தோள்கள்’ அறக்கட்டளையும், 108 ஆம்புலஸ் அவசர சேவையும் இணைந்து முதல் கட்டமாக சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘தோழமை 108’ என்கிற குழுவை தொடங்கியுள்ளது.

10.08.2017 (வியாழக்கிழமை) பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், திரைப்பட நடிகர் ஆரி, வழக்கறிஞர் அலெக்ஸ் சுதாகர் (செயலர் மனித உரிமை கமிஷன் பார் அசோசியேஷன்), பிரபு தாஸ் (108 ஆம்புலன்ஸ் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் பிரிவு), பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் அருட்சகோதரர் ஜான்சன் ரெக்ஸ் தனபால், நமது தோள்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த தோள்கள் சந்துரு மற்றும் தோள்கள் மாணிக்கபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

“தோழமை 108’’ குழு தமிழ்நாடு முழுவதும் உருவாக்கப்பட உள்ளதாக பிரபுதாஸ் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, “விபத்தில்லா தமிழகம், தற்கொலை இல்லா தமிழகம்” உருவாக்க 108 டுடன் 104 உதவி மையமும் இணைந்து பாடுபடுகிறது. அத்தகைய முயற்சியில் இன்று பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், நமது தோள்கள் அறக்கட்டளை, தோழமை 108 –மூலம் கைகோர்க்கும் போது இன்னும் மக்களுக்கான சேவையை சிறப்பாக ஆற்ற முடியும்.” என்றார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பேசும் போது, “முதன் முதலாக பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தோழமை 108 –ஆம்புலன்ஸ், நமது தோள்கள் அறக்கட்டளை இணைந்துள்ளது பாராட்டுக்குரியது. ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். இப்படியான சார்புத் தன்மையில் தான் சமூகத்திற்கான நல்மாற்றங்களை நிகழ்த்த முடியும். நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைத் தவிர்க்க ஒவ்வொருவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.” என்றார்.

இவ்விழாவில் திரைப்பட நடிகர் ஆரி பேசும் போது, “மாணவர்கள் பொதுநலத்துடனும் அதே நேரத்தில் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றவேண்டும்.” என்றார். மேலும் நாட்டு விதைகள் குறித்த முக்கியத்துவத்தையும், அதைக்காக்க நாம் மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசி, தோழமை 108 –ல் பயிற்சி பெற உள்ள பெட்ரிசியன் கல்லூரி மாணவர்களைப் பாராட்டினார். இதை சிறப்பாக வழிநடத்திய நமது தோள்கள் அறக்கட்டளைக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

அலெக்ஸ் சுதாகர் பேசும் போது, “விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்ற தயக்கம் காட்ட வேண்டாம். காப்பாற்ற முற்படும் போது காவல் துறையால் ஏதாகிலும் நமக்கு பிரச்சனை வருமோ என்கிற அச்சம் தேவையற்றது. காரணம் உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியிருக்கின்ற சட்ட வரைவு உதவி செய்ய முன்வருபவர்களை பாதுகாக்கிறது.” என்றார்.

பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் அருட்சகோதரர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் அவர்கள் பேசும் போது, “தோழமை 108-ல் எங்கள் கல்லூரி மாணவர்கள் செயலாற்ற இருப்பது எங்களுக்குப் பெருமை அளிக்கின்றது.” என்றார். மேலும் மக்கள் நலப் பணியில் எங்கள் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இவற்றோடு பேரிடர் காலங்களிலும் எங்கள் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக பணியாற்ற “தோழமை 108’’ –ன் பயிற்சி பேருதவியாக இருக்கும். அந்த வகையில் எதிர்வரும் காலத்தில் வெற்று வார்த்தைகளாக இல்லாமல் சிறந்த செயல்பாடுகளால் பெட்ரிசியன் கல்லூரி உயர்ந்து இருக்கும்.” என்றார்.

நமது தோள்கள் அறக்கட்டளைக்கும், 108 ஆம்புலன்ஸ்-க்கும் நன்றி தெரிவித்ததோடு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் கல்லூரி இயன்ற அளவு முன்வரும் என்றார்.

இவ்விழாவில் “தேவையைக் கருதி உதவி செய்” என்கிற கோட்பாட்டை மையப்பொருளாகக் கொண்டு இக்குழு செயலாற்ற இருப்பதாக நமது தோள்கள் அறக்கட்டளையைச் சார்ந்த சந்ரு தெரிவித்தார்.