full screen background image
Search
Wednesday 24 April 2024
  • :
  • :
Latest Update

ஹாரர் திரில்லரில் அஜித் பட நாயகி

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் ஜேஎஸ்கே எனும் ஜே.சதீஷ்குமார். தற்போது இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்

இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜய்யின் பட்டர்பிளை, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா. இவர்களுடன் கிறிஸ்துவ பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.

கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் கதை. ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்கு ஒரு பூர்வ ஜென்ம கதை என ஹாரர் படங்களுக்கே உரிய வழக்கமான பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஹாலிவுட் பாணியில் எமோஷனல் ஹாரர் படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது.

‘ரிச்சி’ ‘நிமிர்’ படங்களுக்கு இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் H.C.வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கவனிக்கிறார். மாயா, துருவங்கள் பதினாறு, டிக் டிக் டிக் உட்பட பல படங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் சிங்க் சினிமா ஒலி வடிவமைப்பிற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. ஃபோர் ஃப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணன் சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றுகிறார்.

படம் பற்றி இயக்குனர் லோஹித் கூறுகையில், “கோவாவில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இந்தப்படம் தயாராகியுள்ளது. மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு பாட்டு, சண்டை, காமெடி இல்லாமல், அதேசமயம் இரண்டு மணி நேர மிரட்டலான ஹாரர் படமாக இது தயாராகியுள்ளது. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமாரிடம் இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.. இந்தப்படத்திற்காக கோவாவில் 3௦ லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஒரே கட்ட படப்பிடிப்பாக இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்” என்றார்

ஹாரர் படங்களில் தனித்துவம் மிக்க படமாக உருவாக்கி இருக்கும் இந்தப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.