full screen background image
Search
Wednesday 24 April 2024
  • :
  • :
Latest Update

இதயங்களைக் கொள்ளையடிக்கும் ஏ ஆர் ரகுமானின் ஒன் ஹார்ட்

தமிழைத் தவிர வேறு மொழிகளைப் பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர் தான் இந்த தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏ ஆர் ரகுமான். ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என்பதை தன்னுடைய திறமையால் நிரூபித்தவர். இவரின் சிந்தனையில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’

தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்துக் கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட்’ படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏ ஆர் ரகுமான்.

கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைக்கலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படமே தான் கான்சர்ட் ஃபிலிம்.

ஹாலிவுட்டில் இதற்கு முன் ஏராளமான இசைக்கலைஞர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை முன் வைத்து இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அவரை வைத்து உருவாக்கப்பட்ட திஸ் இஸ் இட் (This is it) என்ற கான்சர்ட் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவிலும் இது போன்ற முன்னணி இசைக்கலைஞராக புகழ்பெற்றுத் திகழும் ஏ ஆர் ரஹ்மானை முன்னிறுத்தி உருவான கான்சர்ட் ஃபிலிம் தான் ஒன்ஹார்ட்.

ஏ ஆர் ரகுமான், அமெரிக்காவில் மேற்கொண்ட இசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசைப்பயணத்தின் போது பதினாறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பதினாறு இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து ஒரே படமாக உருவாக்குவதின் முதல் முயற்சி தான் ஒன் ஹார்ட்.

இந்த படத்திற்கான ஒலிக்கலவை முழுவதும் டால்பி அட்மாசில் செதுக்கியிருக்கிறார்கள். இதைக் கேட்ட டால்பி நிறுவனம், தாமே முன்வந்து இப்படத்திற்கு விளம்பரதாரராகியிருக்கிறது. அத்துடன் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலியின் தரத்தையும் உலகளாவிய அளவில் பாராட்டி அங்கீகரித்திருக்கிறது.

இப்படத்தை கனடாவில் ஒரு முறை ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டபோது ஏராளமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்திருக்கிறது. இத்தகைய சிறப்பைப் பெற்ற ஒன் ஹார்ட் படம் உலகமெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த ஒன்ஹார்ட் படத்தில் பதினாறு பாடல்கள் இருந்தாலும் தமிழ் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

இது வரை நீங்கள் ஏ ஆர் ரகுமான், மேடையில் பாடியிருப்பதைக் கண்டு ரசித்திருப்பீர்கள். அவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆஸ்கார் விருது வாங்கியதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு இசைநிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு குறித்தோ, அதற்கான பணிகளில் எப்படி தன்னுடைய குழுவினருடன் ஈடுபடுகிறார் என்பது குறித்தோ, மேடைகளில் பாடவேண்டிய மற்றும் இடம்பெறவேண்டிய நிகழ்வுகளின் வரிசைப் பட்டியல் குறித்தோ அதற்கான பின்னணி குறித்தோ அறிந்திருக்கமாட்டீர்கள். அதனை சுவைப்பட சொல்வது தான் இந்த படம்.

இது அவருடைய ப்ரொபஷனல் பயோகிராபி என்று சொல்லலாம். இந்த படம் ரசிகர்களுக்கு அவரைப்பற்றிய புரிதலை புதிய கோணத்தில் அளிக்கும் என்று உறுதியாக சொல்லலாம். அவர் ஒரு இசைக்குறிப்பை எப்படி உருவாக்குகிறார்? அதனை ஏனைய இசைக்கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார் ? அவர் தன்னுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை, அவர்களின் திறமையைக் கடந்து, எந்தவொரு தனித்துவமான பண்பின் அடிப்படையில் அல்லது எமோஷனல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்பதையும் அவர் விளக்கி கூறும் போது புது அனுபவமாக இருக்கும்.

இதனைத் திரையரங்கத்தில் காணும் போது உங்களுக்கு சிரிக்கத்தோன்றும், அழத் தோன்றும். உணர்ச்சி மேலிடும். கோபம் வரும். பலவித உணர்வுகளின் கலவையாக இப்படம் இருக்கும். அவருடைய லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை துல்லியமான ஒலிகுறிப்புடன் கேட்டு ரசிக்கலாம்.

இப்படம் உலகம் முழுவதும் விரைவில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 25 இப்படம் வெளியாகலாம் என்றும் தெரியவருகிறது.

ஏ ஆர் ரஹ்மானும் அவருடைய இசைக்குழுவினர் தான் இதன் நாயகர்கள் மற்றும் நடிகர்கள். இதில் அவருடன் பாடகர்கள் ஹரிசரண், ஜெனிதா காந்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்குபெற்றிருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு கலைஞரையும் அவர் ஏன் தேர்வு செய்தார்? அதன் பின்னணி என்ன? அவர்கள் மேடை நிகழ்ச்சியில் பங்குபெறும் போது அவர்களிடமிருந்து வெளிப்படும் திறமை என்ன? என பலவற்றை ஏ ஆர் ரகுமான் விவரிக்கும் போது சுவராஸ்யமாக இருக்கும். அவருடைய குழுவில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கலைஞர்களும் முப்பது வயதிற்குட்பட்ட இளைய தலைமுறையினரே.

இந்த படத்திற்குள் ஒரு கதைக்கான அனைத்து விசயங்களும் உள்ளன. நீங்கள் திரையரங்கத்திற்கு வந்து பாடல்களை மட்டும் கேட்கபோவதில்லை. இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். இதில் ‘இண்டிமேட்’ என்ற ஒரு புது விசயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதாவது மக்களில் ஒருவனாக தன்னை வைத்துக் கொண்டு, அவர்களுக்காக சிந்திப்பது. அதே போல் இவருடைய இசை நிகழ்ச்சியை ரசிக்கும் ரசிகர்களின் பரவச உணர்ச்சியும் இதில் இடம்பிடித்திருக்கிறது. இதில் மெலோடியான பாடல்களும் உண்டு. ராப் பாடல்களும் உண்டு. ஃபோக் பாடல்களும் உண்டு. ஒவ்வொரு பாடலின் பின்னணியில் அது உருவான கதையின் சுவராசியமும் உண்டு. இது ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த படம் பாமரன் முதல் படித்த மக்கள் வரை அனைவரும் கொண்டாடும் வகையிலான படம் என்பது மட்டும் உறுதி.