full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

பேசியே ஆகவேண்டுமென்று முடிவெடுத்த பாரதிராஜா

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

‘6 அத்தியாயம்’ திரைப்படம் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா, “பொதுவாக திரைப்படங்களைப் பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும் போது, சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒன்றை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பெரும்பாலும் நழுவிவிடுவேன். ஆனால் இந்த ‘6 அத்தியாயம்’ படத்தைப் பார்த்து முடித்ததுமே, நானே இந்தப் படத்தை பற்றி பேசிவிட்டுத்தான் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

இந்தப்படம் திரையிடப்பட்டு முதல் அத்தியாயம் முடிந்ததுமே, எங்கேயோ ஒரு குரூப் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறதே என நினைத்தேன். இரண்டாவது, மூன்றாவது எபிசோடுகளில் அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசி அத்தியாயத்தில் அப்படியே மிரண்டு விட்டேன்.

எனக்கும் இதுபோன்ற சிந்தனைகள் இருந்ததுண்டு. ஆனால் அதை ஒருபோதும் நான் செயல்படுத்த முயன்றதில்லை. கச்சிதமான சிந்தனை என்பது ஒரு சினிமாவுக்கு செய்யக்கூடிய தர்மம். பிரெஞ்ச், ஈரானிய, ஜப்பானிய, சைனீஸ் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு பாராட்டுகிறோம். தமிழ்நாட்டுல இவ்வளவு பிரமாதமான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்ததுமே, யார் இவர்கள், இவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்று தான் நானே மைக் பிடித்தேன்.

இந்த யோசனையே புதிதாக உள்ளது. தமிழ் சினிமாவிற்கு இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. 6 அத்தியாயங்களை எப்படி ஒன்று சேர்ப்பது..? ஒரு அத்தியாயம் முடிந்ததுமே எழுந்து போகக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனால் இந்தப்படத்தில் முதல் அத்தியாயம் முடியும் போதே இரண்டாம் அத்தியாயத்தை பார்க்கும் விதமாக நம்மை இழுத்து பிடித்து அமர வைத்து விடும் யுத்தியை இதில் கையாண்டிருக்கிறார்கள்.

இப்படி ஆறு அத்தியாயங்களுக்கும் நம்மை கட்டிப்போட்டு கடைசியில் அனைத்திற்கும் சேர்த்து 6-வது அத்தியாயம் முடிவில் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முடிவு சொல்லியிருக்கிறார்கள். இது மிகச்சிறந்த யோசனை. மிகப்பெரிய சாதனையும் கூட. இதுபோல நல்ல கலைஞர்கள் வந்தார்கள் என்றால் தமிழ் திரையுலகைப் பற்றி உலகம் முழுதும் பேசுவார்கள்.

6 அத்தியாயம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என பாராட்டி பேசினார்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

படத்திற்கான கேம் ஆப் “RunForUrLife” எனும் பெயரில் கூகிள் பிலே ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் படக்குழு விரைவில் வெளியிடயிருக்கிறது.

‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.