full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

எனது தந்தை விரைவில் குணமடைந்து வருவார் வதந்திகளை நம்ப வேண்டாம் – எஸ்.பி.பி.சரண்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி உடல்நிலை பூரண நலம்பெறப் பிரார்த்தனை செய்வதாக இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பதிவில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது என்றும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்ததாகவும், அவர் விரைவாக குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் உடனடியாக அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை குறித்த மாறுபட்ட தகவல்கள் பரவத் தொடங்கின.

இதை தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தனது டுவிட்டர் தனது தந்தையின் உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

“எஸ்.பி.பி.-யின் நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் எம்ஜிஎம் மருத்துவமனையின் பாதுகாப்பான சிகிச்சையில் உள்ளார். விரைவில் அவர் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் உள்ளோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.