full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

கனியின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா” !

இயக்குநர் திருவின் மனைவியும் தேசிய விருது வென்ற இயக்குநர் அகத்தியன் அவர்களின் மகளுமாகிய கனி தனது புத்தம் புது பயணத்தை “ஒரு ஊர்ல ஒரு ராஜா” நிகழ்ச்சி  மூலம் துவங்கியுள்ளார். சமீபத்தில் Yotube தளத்தில் Theatre D சேனலில்  வெளியாகியுள்ள “ஒரு ஊர்ல ஒரு ராஜா” எனும் இந்நிகழ்ச்சி வரலாற்றை  கதை சொல்லல் முறையில் சொல்வதில் புது அலையை உண்டாக்கி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து தயாரித்துள்ளார் இயக்குநர் திரு.

இந்தப் பயணம் எப்படி தொடங்கியது என கனியிடம் கேட்டபோது…

எனது பால்ய காலத்திலிருந்தே வரலாறு எனக்கு மிகவும்  பிடித்த பாடம்.  வரலாற்றை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த வகையில் மிகப்பெரும் கூட்டத்திற்கு வரலாற்றை கதை வடிவில் சொல்ல முடியும் என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இப்படித்தான் இந்த ஐடியா தோன்றியது. முன்பு பெரியவர்கள் எந்த ஒரு கதையையும்  சிறுவர்களுக்கு சொல்லும் போது “ஒரு ஊர்ல ஒரு ராஜா” எனத்தான் ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் இந்நிகழ்ச்சியின் தலைப்பும் அமைந்தது. நான் வரலாற்றின் வழி ஒழுக்கத்தை கற்றுத்தரவே  நினைக்கிறேன் வரலாற்றின் மூலம் நாம் அனைவரும் ஒழுக்கத்தை கற்று பயன் பெறலாம். நம் நிலத்தின் வரலாற்றையும் மூதாதையர்களின் வரலாற்றையும்
அறிந்து கொள்வதன் மூலம் நமது தென்னிந்திய கலாச்சாரத்தையும் பாராம்பரியத்தையும் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் மூலம்  நமது கடந்த காலத்தை கற்றுகொள்வதன் வழியே நாம் பல நல்ல விசயங்களை கற்று நமது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ளலாம். எனவே தான் நான் நமது இந்திய வரலாற்றை தேர்ந்தெடுத்தேன். பேரழகு மிகுந்த தனித்துவமிக்க பெரும் வளங்கள் நிறைந்த நம் இந்தியா படையெடுப்பின் மூலம் எத்தைகய பெரும் மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்பதை நம் வரலாற்றின் மூலம் அறியலாம்.

ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சி எத்தகைய வரவேற்பை பெறும் என்பதில் பெரும் குழப்ப மன நிலையில் தவித்திருக்கிறார் கனி. தற்போது வரலாற்றை மிக வித்தியாசமாக அணுகியதாக எண்ணற்ற பார்வையாளர்களின் பெருமை மிக்க பாராட்டுக்களால் மகிழ்ச்சிகடலில் மிதந்து வருகிறார். எல்லோரையும் போலவே இதனை பார்வையாளர்கள் எப்படி எடுத்துகொள்வார்கள் என மிகுந்த தயக்கத்தில் இருந்தேன். ஆனால் தற்போது  நிகழ்ச்சியின் இரண்டு பகுதிகள் வெளியான பிறகு பார்வையாளர்களின்  இதயம் கனிந்த பாரட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் தந்திருக்கிறது. இன்னும் இதே போல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தகவல்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை செய்ய பெரும் ஊக்கம் கிடைத்திருக்கிறது என்றார்.