full screen background image
Search
Tuesday 16 April 2024
  • :
  • :
Latest Update

“மாட்டிக்கிச்சே” பாடலாசிரியரை வறுத்தெடுத்த முருகன் மந்திரம்!!

தமிழ் சினிமா பாடல்களில் பெண்களுக்கான மரியாதை என்பது துளிகூட இருப்பதில்லை. தாமரை, உமாதேவி, தமிழச்சி தங்கபாண்டியன், குட்டி ரேவதி போன்ற பெண் பாடலாசிரியர்கள் அழகு தமிழில் அர்த்தம் நிறைந்த வரிகளால் பாட்டெழுதினாலும் ஹிட்டாவது என்னவோ “பீப் சாங்க்” தான். ஒரு சில ஆண் பாடலாசிரியர்களைத் தவிர ஏனையோர் எழுதும் பாடல்கள் எல்லாம் நாராச ரகம் தான். இந்த உண்மையை எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசியிருக்கிறார் பாடலாசிரியர் முருகன் மந்திரம்.

சமீபத்தில் நடைபெற்ற “நாகேஷ் திரையரங்கம்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேடையேறிய முருகன் மந்திரம், தமிழ்ப் பாடல்களில் பெண்களை உருவகப்படுத்துவது குறித்தும், அதன் பின்னால் இருக்கும் உளவியல் குறித்தும் பொரிந்து கொட்டினார்.

“தமிழ்ப் பாடல் களத்தில் கவிப்பேரரசிகளாக விளங்கக் கூடிய தாமரை மற்றும் உமாதேவி இருவருடன் நானும் இப்படத்தில் பாடல் எழுதியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி. இந்தப் பாடல் எழுத வேண்டிய சூழல் என்பது, “அடிடா அவளை, உதைடா அவளை” என்பது போன்றது. ஆனால் அப்படியான சூழலில், அது போல பொருளுடைய பாடல் எழுதிய போதிலும் “தாலி என்பதே ஒரு தூக்குக் கயிறுடா, அதை தெரிஞ்சு கட்டுறா அவ தெய்வம் தானடா” என்று எழுதினேன். பெண்களை நம் தமிழ் சினிமா பாடல்களில் உருவகப்படுத்துவதே ஒரு மலிவான உளவியல் சார்ந்தது தான். சமீபத்தில் கூட ஒரு பாடலாசிரியர் “மாட்டிக்கிச்சே, மாட்டிக்கிச்சே” என்று எழுதியிருக்கிறார். பல மாதங்களாக ஒரு பெண்ணின் பின்னால் அலைந்து திரிந்து.. அந்தப் பெண் தன் காதலை ஏற்றுக் கொள்ளும் போது “மாட்டிக்கிச்சே, மாட்டிக்கிச்சே” என்று எப்படி சொல்ல முடியும்?. காதலியை ஏதோ மாங்காயை வீழ்த்துவது போல பாடல் எழுதலாமா?. பெண் என்பவளை வீழ்த்தி அடையக் கூடிய ஒரு பொருளாகத்தான் இங்கு ஆண்கள் நினைக்கிறார்கள், இந்த சூழல் மாறவேண்டும்” என்று காரசாரமாக பேசினார்.