full screen background image
Search
Tuesday 19 March 2024
  • :
  • :

”ஊமைச் செந்நாய் என்னை புதிதாக காட்டும்” ; மைகேல் தங்கதுரை நம்பிக்கை

த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு.. அந்தவகையில் LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரிப்பில் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடித்துள்ளார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இவர் பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார்.இந்தப்படம் வரும் டிச-1௦ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்தநிலையில் நாயகன் மைக்கேல் தங்கதுரை இந்தப்படம் குறித்தும் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“அர்ஜுன் ஏகலைவனும் நானும் ஐந்து வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு கதைக்காக சந்தித்தோம்.. ஆனால் அதன்பிறகுதான் இந்த ஊமைச் செந்நாய் படத்திற்கான கதை உருவானது. பார்த்திபன் என்கிற டாக்டர் கதாபாத்திராத்தில் நடித்துள்ளேன். மருத்துவ உலகில் இருக்கும் ஒருவன் தனக்கு ஏற்படும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் கதை.. அதேசமயம் எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகவில்லை.மற்ற படங்களை போல ஒருநாளைக்கு ஒரு லொக்கேசன் என படப்பிடிப்பை நடத்தாமல், ஒரேநாளில் ஐந்து இடங்களில் கூட படப்பிடிப்பை நடத்தினோம்.. எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த சூழல் சரியாக இருக்கிறதோ அந்த இடங்களுக்கு உடனுக்குடன் மாறிக்கொண்டோம். அதற்கேற்றபடி அனைத்து கலைஞர்களும் தங்களது நேரத்தை ஒதுக்கி அருமையான ஒத்துழைப்பு தந்தனர்.

எனது முந்திய படங்களை விட இந்தப்படத்தில் சற்று மாறுபட்ட நடிப்பை என்னிடம் பார்க்கலாம். காட்சிகளில் வசனங்களை குறைத்து முகபாவங்கள் மூலமாகவே அதிகம் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன். பின்னே.. இயக்குநர் மிஸ்கினின் சீடராச்சே.. என்னுடன் இணைந்து நடித்துள்ள சனம் ஷெட்டி எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர். அவரும் நானும் காட்சிககளை படமாக்குவதற்குமுன் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொள்வோம். .இந்தப்படத்தின் ஹைலைட்டாக ஆக்சன் காட்சிகள் அமைந்துள்ளன. ஒரு கன்டெய்னருக்குள்ளேயே நடக்கும் சண்டைக்காட்சியும் கிளைமாக்ஸில் சோளக்காட்டில் படமாக்கப்பட்டுள்ள ஆக்சன் காட்சியும் நிச்சயம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக இருக்கும். தினேஷ் கார்த்திக் மாஸ்டர் தான் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.குறிப்பாக பொள்ளாச்சியில் படமாக்கப்பட்ட அந்த சோளக்காட்டு சண்டைக்காட்சி மறக்க முடியாத ஒன்று.. வெளிச்சம் மறைய ஆரம்பிக்கும் ஒரு மாலை நேரத்தில் அந்த க்ளைமாக்ஸ் சண்டை காட்சியை வேகமாக படமாக்கி கொண்டிருந்தோம்.. நானும் வில்லனாக நடித்த சாய் ராஜ்குமாரும் மோதும் அந்த காட்சியில் நடித்து முடித்தபின் தான், கேமராவை இயக்கிய ஆபரேட்டர் அதை ஆன் பண்ண மறந்துவிட்டார் என்பதே தெரிய வந்தது.. மீண்டும் நடிப்பதில் ஒன்றும் தயக்கம் இல்லை. ஆனால் அந்த காட்சியில் வில்லனை நிஜமாகவே அடிப்பது போன்று நடித்திருந்தேன்.. மேலும் டம்மி ஆயுதங்களும் கூட அந்த காட்சியில் உடைந்துவிட்டன. மீண்டும் அதே காட்சியில் நடிக்கும்போது சாய் ராஜ்குமாரை மீண்டும் அடிக்க வேண்டுமே என்கிற சங்கடம் தான் ஏற்பட்டது. இருந்தாலும் ஒருவழியாக சமாளித்து மீண்டும் அந்த காட்சியை படமாக்கி முடித்தோம்.

Oomai sennai press meet - YouTube

கொரோனா தாக்கத்திற்கு முன்பே கிட்டத்தட்ட படப்பிடிபை முடித்து விட்டாலும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவதற்கு தாமதம் ஆனது. ஒடிடி வெளியீட்டிற்காக யோசித்து வந்த சமயத்தில் தான், தற்போது நூறு சதவீத பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் செயல்பட துவங்கியுள்ளதால் நேரடியாக திரையரங்குகளிலேயே படத்தை ரிலீஸ் செய்ய தீர்மானித்தோம். இருந்தாலும் ஒடிடி தளங்கள் இனிவரும் நாட்களில் தவிர்க்க முடியாதது. ஓரிரு வாரங்களில் படங்கள் திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்ட பின் அவற்றை பார்க்க வேண்டும் என்றால் ஒடிடி தளங்கள் மிகவும் அவசியமான ஒன்று.பர்மா படத்திற்கு பின்னர் ரெண்டு வருஷம் பிரேக் எடுத்துக்கிட்டேன்.. அதுக்கப்புறமா எட்டு படங்கள்ல நடிக்க ஒத்துக்கிட்டேன்.. அதுல ஊமைச் செந்நாய், பதுங்கி பாயணும் தல, என்-4, வார்டு 126, அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கும் என ஆறு படங்கள் ரிலீஸுக்கு தயாரா இருக்கு.. இன்னும் இரண்டு படங்களோட ஷூட்டிங் சீக்கிரமே ஆரம்பிக்க இருக்கு. இனி சீரான இடைவெளில என்னோட படங்கள் வெளியாகும்னு எதிர்பார்க்கிறேன்” என்றார் மைக்கேல் தங்கதுரை