full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

கேள்விக்கு உட்படுத்துகிறது இந்த தலைப்பு : பா ரஞ்சித்

இயக்குனர் பா இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர்.

அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் “நீலம் பண்பாட்டு மையம்” ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள “நானும் ஒரு குழந்தை” என்னும் தலைப்பில் புகைப்படக்கண்காட்சி ஒன்றை நேற்று துவக்கி வைத்தார் பா.இரஞ்சித்.

“சாதியை ஒழிப்போம்.. சமூக மாற்றத்திற்கான மனித மாண்பை மீட்டெடுப்போம்” என்கிற முழக்கத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் புகைப்படக் கலைஞர் ம பழனிகுமாரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

புகைப்படக் கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், “”நானும் ஒரு குழந்தை ” என்கிற இந்த தலைப்பே ஒரு நம்மை ஒரு கேள்விக்கு உட்படுத்துகிறது.

வழக்கமான புகைப்படக்கண்காட்சியைப்போல் அல்லாமல் புகைப்படக்கலைஞர் பழனிக்குமார் மலமள்ளும் தொழிலாளர்களின் வலியைச் சொல்லும் புகைப்படத்தொகுப்பு பார்வைக்கு வைத்திருந்தது புதுமையாக இருந்தது .

புகைப்படங்கள் மூலமாக இந்த சமூகத்தில் இருக்கும் ஒரு மக்களின் வாழ்க்கையின் வலிகளை பல கேள்விகளாக நம் முன்னே வைக்கிறார். கண் முன்னே நடக்கும் அவலத்தை தனது புகைப்படக்கலை மூலமாக காட்சிபடுத்தியிருப்பது பொழுது போக்குக்காக அல்லாமல் இந்த சாதிய சமூகத்தின் தற்போதைய உண்மையின் நிலையை காட்டுகிறது.

மலமள்ளும் தொழிலாளர்களின் அன்றாட பயணங்கள், அவர்கள் உண்ணும் கடைகளில் மீந்துபோகும் உணவு, அவர்களுக்கு கழிவுக் கடல்களில் கைகொடுக்கும் பாய்கள், அவர்கள் வசிக்கும் தரையற்ற வீடுகள், தாகம்கொண்ட அவர்கள் வீட்டுக் குடங்கள், படிக்க ஒதுங்கும் திண்ணைகள், படிக்காத குழந்தைகள் கூட்டம், மயிரிழையில் நிற்கும் மரணம், கணவர்களை இழந்து கண்ணீரில் கரையும் மனைவிகள், மரணக் கூடத்திலும் தொட மறுக்கும் சாதி, அதன் கசடுகளென நிறைந்து வழியும் குப்பைத் தொட்டிகள், விஷவாயு கொண்டு போய்விட்ட அப்பாவுக்காக, அண்ணனுக்காக, மகனுக்காக, கணவனுக்காக, காதலனுக்காக, நண்பனுக்காக காத்திருக்கும் மனிதர்களும் செல்லப் பிராணிகளும் என பழனியின் புகைப்படங்கள் நம்மை அவர்களின் வாழ்வுக்குள் ஆழமாய் அழுத்தமாய் இட்டுச்செல்கின்றன.

இந்த புகைப்படக் கண்காட்சி நவம்பர் 9 முதல் 14ம் வரை லலித் கலா அகாடமி, கிரீம்ஸ் ரோடு, சென்னையில் நடைபெறுகிறது .