full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

பரிசீலனைக்கு வந்த வேட்புமனுக்களில் மூன்று ஏற்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும் நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 115 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தது சாதனையாக கருதப்படுகிறது.

அதுவும் சுயேட்சை வேட்பாளர்கள் விதவிதமாக வந்து தேர்தல் அலுவலக அதிகாரிகளை திணற வைத்து விட்டனர். கடைசி நிமிடத்தில் இவ்வளவு சுயேட்சைகள் வந்ததில் அரசியல் சூழ்ச்சி பின்னணியாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை திணற வைக்கவே சுயேட்சைகள் களம் இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து நடிகர் விஷால் உள்ளிட்ட சுயேட்சைகளின் மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இன்று பிற்பகல் 4 மணியுடன் மனுக்கள் பரிசீலனை நிறைவு பெறுகிறது.