full screen background image
Search
Wednesday 17 April 2024
  • :
  • :
Latest Update

பிரபுதேவாவுக்கு வாழ்த்து சொன்ன சங்கர் மகாதேவன்

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன் மற்றும் கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ஒரு பக்க கதை” படத்தைத் தயாரித்து வருகிறார்கள். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அதைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ஓடி ஓடி உழைக்கனும்” படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “எங் மங் சங்” படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.

தங்கர்பச்சான், சித்ராலட்சுமணன், கே.ராஜன், ஆர் ஜே பாலாஜி, பாகுபலி பிரபாகர் (காலக்கேயா), கும்கி அஸ்வின், மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ் (இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்). இசை – அம்ரீஷ், கலை – ராஜன்.டி, தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.பி.பாலகோபி, தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.அர்ஜுன்.

இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் இடம் பெறும் பாடலான

“அய்யனாரா வந்துட்டாங்க

இங்க பாரு

காவல் தெய்வமா

மூணு பேரு”

இந்தப் பாடலை பிரபுதேவா முதன் முறையாக எழுதி இருக்கிறார். இந்த பாடல் அம்ரீஷ் இசையில் சங்கர் மகாதேவன் பாட சமீபத்தில் மும்பையில் பதிவு செய்யப்பட்டது. பாடலைப் பாடி முடித்த சங்கர் மகாதேவன் உடனடியாக பிரபுதேவாவுக்கு போன் செய்து, “சூப்பர் ஹிட்டாகக் கூடிய இந்தப் பாடலை நீங்க எழுதி இருக்கீங்கன்னு அம்ரீஷ் சொன்னார்.

இந்த பாட்டு நிச்சயம் எல்லா இடத்திலும் ஒலிக்கும். வாழ்த்துக்கள்.” என்று பிரபுதேவாவை வாழ்த்தியதோடு இல்லாமல் இசை அமைப்பாளர் அம்ரீஷையும் பாராட்டினார்.

எங் மங் சங் படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.