full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

திரை பிரபலங்கள் கொண்டாடிய பொங்கல் திருவிழா..

சென்னை, தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூரில் இயங்கி வரும் எஸ்.கே.பி. வித்யாஸ்ரம் பள்ளியில் (SKB VIDHYASHRAM GROUP OF SCHOOLS) சாதாரண மாணவர்களுடன், மாற்றுத்திறனாளி மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.

காது கேட்கும் திறன் அல்லாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டாவர்கள் போன்ற சிறப்பு குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் பயிற்றுவித்து வரும் இப்பள்ளி இதுபோன்ற மாணவர்களை தங்களது கற்றுவித்தல் மற்றும் பயிற்சியின் மூலம் 90 சதவீதம் பேரை குணப்படுத்தி அவர்களை பிற மாணவர்களை போல சகஜமான நிலைக்கு மாற்றியுள்ளார்கள்.

கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வரும் எஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 5 ஆம் தேதி ‘பொங்கல் திருவிழா 2019’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமான கலை விழாவை பள்ளி வளாகத்தில் நடத்தியது.

ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் என்று பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளோடு அரிய வகை சேவல் கண்காட்சியையும் நடத்தியது. மேலும், கண் பார்வையற்றவர்களின் வாழ்வாதாரத்திற்காக, அவர்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை மையங்களும் இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜான் விஜய், நடிகரும் பாடலாசிரியருமான சினேகன், சமூக சேவகரும் பிக் பாஸ் போட்டியாளருமான நித்யா பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். இவர்களுடன் இந்தியாவின் இளம் தொழில் முனைவர்களான விதுலா, இஷானா, புதியா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். 8 வயதுடைய இந்த மூன்று சிறுவர்களும் சொந்தமாக நிறுவனங்கள் நடத்தி வருவதோடு, தாய்லாந்தில் நடைபெற்ற ‘kidX Asia’ என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் பேச்சாளர்களாக கலந்துகொண்டார்கள்.

கூத்து பட்டறை உள்ளிட்ட கலைக்குழுவினர் பங்குகொண்ட இந்த கலை நிகழ்ச்சியில் எஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

ஒரு நாள் மட்டும் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடம் பாராட்டு பெற்று வருவதோடு, இப்பள்ளியின் சிறப்பான பணி குறித்தும் பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

சாதாரண குழந்தைகளுடன், மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் சேர்த்து சிறப்பான முறையில் பயிற்றுவிக்கும் இப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக தனியாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு மற்றும் தெரபியும் வழங்கப்படுகிறது.

இப்பள்ளியின் நிறுவனரும், தாளலருமான மஞ்சு பிரியா மாரிச்சாமி, இந்நிகழ்ச்சி குறித்து கூறுகையில், “மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தோடும், நமது கலாச்சாரம் பண்பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்திலும் இந்த பொங்கல் கலை விழா நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் உற்சாகத்தோடு கலந்துக்கொண்டார்கள்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை எங்களது பள்ளி சார்பில் நாங்கள் அனுப்பி வைத்தோம். மேலும், டெல்டா மாவட்ட கிரமாமான வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள தல ஒரு குடும்பத்திற்கு 3 ஆடுகள் மற்றும் 4 கோழிகள் வாங்கிக்கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். சுமார் 60 குடும்பங்களுக்கு இந்த உதவியை செய்ய நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இதற்காக தற்போது நிதி திரட்டி வருகிறோம்.

அதேபோல், எங்களது பள்ளியில் பயிலும் சிறப்பு குழந்தைகளுக்காக பிரத்யேகமாக கழிவறைகள் மற்றும் தெரப்பி அளிப்பதற்கான இரண்டு வகுப்பறைகள் கட்டவும் முடிவு செய்திருக்கிறோம். ஆனால், அதற்கான நிதி எங்களிடம் தற்போது இல்லாததால், அதற்கான நிதியை திரட்டவும் முடிவு செய்திருக்கிறோம்.

எங்களது பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் இருக்கிறது. எனவே, கட்டிடம் கட்டுவதற்கான நிதியை மட்டும் கொடுத்து யார் உதவி செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சாதாரணமான மாணவர்களுக்கான பள்ளியாக மட்டும் எங்கள் ஸ்.கே.பி. வித்யாஸ்ரம் பள்ளியை நாங்கள் நடத்தவில்லை, பிறக்கும்போதே குறைபாடுடன் பிறக்கும் சிறப்பு குழந்தைகளுக்காகவும் நாங்கள் எங்கள் பள்ளியை நடத்தி வருவதால், அவர்களை மேம்படுத்துவதற்காக கூடுதலாக செலவு செய்து வருகிறோம்.” என்றார்.