நேரில் பார்த்த சம்பவங்களை படத்தில் வைத்து..இயக்குநர் தனக்குத் தானே வைத்துக்கொண்ட செக்…

News
0
(0)

ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை மதுராஜ் இயக்கியுள்ளார்.

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற கேரளமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். மிக முக்கியமான கேரெக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ் (இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா), தீப்பெட்டி கணேசன், அபூர்வா சஹானா, மைனா சூஸன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

உத்தமராஜா இசையமைத்துள்ளார்.. ஏகாம்பரம், கார்த்திக் ராஜா ஆகியோரிடம் பணிபுரிந்த செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். “ஆறாது சினம்”, “தலைமுறைகள்” ஆகிய படங்களில் பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். “உறியடி” படத்திற்கு காட்சிகள் அமைத்த விக்கி நந்த கோபால் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள தொட்ரா படம் ஜுலை 13 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. படம் பார்த்த இயக்குநர் கே பாக்கியராஜ் தனது பெயரை மதுராஜ் காப்பாற்றி உள்ளதாகவும், தயாரிப்பாளர் ஜே எஸ் கே, ”படம் எனக்கு பிடித்திருந்தது… தொட்ரா ஒரு ஃபீல் குட் மூவி” எனவும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இயக்குநர் மதுராஜிடம் படம் பற்றி கேட்டபோது, “ ஒவ்வொரு அறிமுக இயக்குநருக்கும் முதல் படம் என்பது மறுபிறப்பு மாதிரி… அதற்கு தாயாக இருப்பவர் தயாரிப்பாளர்தான். எனக்கு கிடைத்த தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் உண்மையாக ஒரு தாய் போல இந்த சினிமாவை நேசித்ததால்தான் என்னால் இவ்வளவு வேகமாக ஒரு தரமான படத்தை எடுக்க முடிந்தது.

ஒவ்வொரு அறிமுக இயக்குநருக்கும் இப்படியொரு தயாரிப்பாளர் அமையவேண்டும். பிருத்விராஜன் ஒரு ஸ்டார் வீட்டு பிள்ளை போல் இல்லாமல்.. வெகு இயல்பாக நடந்துகொண்டார். ரோட்டிலேயே காருக்கு பின்னால் தனது உடையை மாற்றிக் கொண்டு ஷாட்டுக்கு தயாராகிவிடுவார். இந்த படத்தில் ஒரு மெச்சூர்டான நடிப்பை பார்க்க முடியும்,.

வீணா அழகான யதார்த்தமான நடிப்பில் கெட்டி… முதல் சில நாட்கள் மொழி தடுமாற்றம் இருந்தாலும்.. பணக்கார வீட்டு கிராமத்துப் பெண்..காதல் திருமணம் செய்துகொண்டு எளிமையாக வாழும் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். படம் முடிந்து வரும்போது இயக்குநர் ஏ. வெங்கடேஷ் மற்றும் எம் எஸ் குமார் மனதில் ஒட்டிக்கொண்டு நிற்பார்கள்.

மிக முக்கியமாக.. இந்த படத்தில் காதல் கட்டப் பஞ்சாயத்துகள் அதன் தீவிரத்தால் பாதிக்கப்படும் காதலர்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளோம். எங்க ஊரில் இந்த வேலையை செய்பவர்களுடன் கூடவே பல நாட்கள் தங்கியிருந்து நேரில் பார்த்த சம்பவங்களை இதில் பதிவு செய்துள்ளேன். ஒரு பையனை நெடுஞ்சாலையில் பாரிகார்டில் கட்டிப்போட்டிருந்தனர். சில பல பேச்சுவார்த்தைகள்.. பணப்பேரம் நடந்த பின், அந்த பையனை பெண்ணிடமிருந்து பிரித்து பெங்களூருக்கு மிரட்டி அனுப்பி வைத்தனர்..

அந்த ஒரிஜினல் தாதாக்களை என் படத்தில் அவர்களாகவே நடிக்க வைத்துள்ளேன். அவர்களுக்கு தாங்கள் நடிக்கிறோம் என்பது மட்டும்தான் தெரியும்.. தாங்கள் நிஜத்தில் செய்யும் வேலையைத்தான் படத்திலும் செய்கிறோம் என்பது படம் வெளியானால்தான் அவர்களுக்கே தெரியும். படம் வெளியான பின் அவர்களுக்கு ஓடி ஒளிய வேண்டுமா? இல்லை மன்னிப்பார்களா? தெரியாது.

படம் சொன்ன மாதிரி வேகமாக அழகாக எடுத்துவிட்டோம். ஆனால்.. அந்த பெரிய படம் வருகிறது… இந்த படம் வருகிறது.. ஸ்ட்ரைக்.. இப்படி சில வாரங்கள் கடந்து இப்போது ஜூலை 13ம் தேதி பிரசவம். ஜாதிப்போராட்டம்.. காதலுக்கு எதிர்ப்பு என இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனகளை மையப்படுத்தி கதை சொல்லியிருப்பதால் தொட்ரா படம் இளைஞர்களுக்கு நெருக்கமாக போய் உட்காரும் என நம்புகிறேன்… கடைக்குட்டி சிங்கம் உடன் வெளியாகிறது. பெரிய படம் என்ற பயம் இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் ஒரு பெரிய படம் வருகிறது.. வேறு வழியில்லை. தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்க முடியாது.. படத்தின் மீதும், கதையின் மீதும் உள்ள நம்பிக்கையில் வருகிறோம்,” என்றார் இயக்குநர் மதுராஜ்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.